கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக மாநில தலைவரும்,  கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில்…

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக மாநில தலைவரும்,  கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை,  திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில்,  பாஜக மாநிலத் தலைவரும்,  கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை நேற்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டார்.  அப்போது அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஆவாரம்பாளையம் பகுதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு 10.30 மணிக்கு பின்னர் வந்துள்ளார்.  இரவு 10 மணிக்கு மேலாக வாக்கு சேகரிக்க அனுமதி இல்லாத நிலையில்,  10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்த திமுக,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  மதிமுக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் அண்ணாமலை மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.