எல்ஐசி பங்குகளை விற்பனை செய்யும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட சட்ட திருத்தங்களை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எல்ஐசி பாலிசிதாரரான பொன்னம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் வகையில் நிதி சட்டத்திலும், எல்.ஐ.சி. சட்டத்திலும் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, எல்ஐசி பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறினர்.
எனவே அரசியல் சாசனத்தின்படி மத்திய அரசு மேற்கொண்ட சட்ட திருத்தம் செல்லும் எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாலிசி எடுத்துள்ள மனுதாரர், 65 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு நிதி கிடைக்கும் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இந்த நிதி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அரசின் பொது நல கொள்கையில் தலையிட முடியாது எனவும் தெரிவித்தனர்.







