இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் ‘கேப்டன் மில்லர்’படம் உருவாகவுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல தசாப்தங்களாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம், பாராட்டுக்களைக் குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’என்ற புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளது. பிரமாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்த படம் குறித்து தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் கூறும்போது, எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரமாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும். எங்களின் மதிப்புமிக்க திரைப்படமான ‘கேப்டன் மில்லர்’படத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நடிகர் தனுஷுடன் பணிபுரிவது எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஏனெனில் எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம்.
இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும். அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அவரது சிந்தனை மற்றும் அவரது திரைக்கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும்.
இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏற்கனவே தங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தைச் செதுக்கியிருக்கிறார்கள், மேலும் அவர்களின் பங்களிப்பு ‘கேப்டன் மில்லரை’பெரிய அளவில் கொண்டு செல்லும். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் புதியதாகவும், கவர்ச்சிகரமான படைப்பாகவும் இருக்கும். இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர் என்று கூறினார்.








