சினிமாவிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது, இன்னமும் நான் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் உள்ளேன் என நடிகர் கூல் சுரேஷ் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்திற்காக நடிகர் கூல் சுரேஷ் பல்வேறு வழிகளில் புரொமோஷன் செய்து வந்தார். படம் வெளியான போது அவர் வந்த கார் கண்ணாடி ரசிகர்கள் சிலரால் உடைக்கப்பட்டது. அது தொடர்பாக நடிகர் கூல் சுரேஷ் வீடியோ வெளியிட்டு தனது விளக்கத்தைப் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் “வெந்து தணிந்தது காடு படம் பெரிய வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி. சிம்பு சார் ரசிகர்களுக்கு நன்றி . கூல் சுரேஷ் கார் அடித்து நொறுக்கப் பட்டதாகச் செய்தி வெளியாகி உள்ளது. அப்படி எதுவும் கிடையாது. ரசிகர்கள் என் மீது கொண்ட அன்பால் கார் மீது ஏறி விட்டனர். அவ்வளவு தான் வேறு எதுவும் இல்லை.
ரசிகர்கள் தான் எனக்குப் பாதுகாப்பு. ஒரு மனிதன் முன்னுக்கு வரக் கூடாதா. என்னை ஏன் அடிக்கவில்லை எனச் சிலர் கமென்ட் செய்துள்ளனர். நான் திரைத்துறையிற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என தெரியுமா ஒரு மனிதன் பேர் புகழுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு வருகிறேன் தெரியுமா. சமூக வலைத்தளங்களில் நான் பிரபலமாக இருந்தாலும் வாடகை கொடுக்கக் கூட வழி இல்லாமல் இருக்கிறேன்.
சிம்புக்காக தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். அந்த படமும் வெளியாகி விட்டது. உங்களைச் சந்தோஷப்படுத்தத் தான் நான் திரையரங்கு வருகிறேன். உடைந்தது கார் கண்ணாடி மட்டும் தான். எனக்குத் தெரிந்த சிலர் உள்ளனர் அவர்கள் எனக்கு உதவுவார்கள். ரசிகர்கள் கொடுத்தது தான் எல்லாம். என்னைப் பற்றி அவதூறாக எதுவும் பேச வேண்டாம். திரைத்துறையிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது இன்னமும் நான் கஷ்டப்பட்டுக் கொண்டு தான் உள்ளேன்” என வருத்தோடு பேசியுள்ளார்.







