உத்தரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் வைத்து உணவு விநியோகம் செய்வது போன்ற வீடியோ வெளியானதை தொடர்ந்து அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் விளையாட்டு மைதானத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் இருந்து உணவு கொண்டு செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 16ம் தேதி சஹாரன்பூர் பகுதியில் நடைபெற்ற பெண்களுக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியின் போது சில வீரர்களால் இந்த வீடியே எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த வீடியோ பதிவில், கழிவறை போன்ற தோற்றத்தில் உள்ள பல்வேறு பாத்திரங்களில் இருந்து மாணவர்கள் அரிசி மற்றும் காய்கறிகளை எடுத்து செல்வதும், சிறுநீர் கழிப்பறைகள் மற்றும் வாஷ் பேசின்களும் காட்டப்படுகிறது. அதன் வாயிலுக்கு அருகில் உள்ள கழிப்பறைத் தரையில் வைக்கப்பட்டுள்ள சாப்பாடு காண்பிக்கப்படுகிறது. இரண்டாவது வீடியோ, ஊழியர்கள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, உணவு சமைக்கப்படும் நீச்சல் குளத்தின் அருகே வெளியே கொண்டு வருவதைக் காட்டுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரி அனிமேஷ் சக்சேனா, “இட நெருக்கடி” காரணமாக உணவை கழிவறையில் வைக்கப்பட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது. மழை பெய்ததால், நீச்சல் குளம் பகுதியில் உணவுக்கு ஏற்பாடு செய்தோம். நீச்சல் குளத்திற்குப் பக்கத்தில் உள்ள உடை மாற்றும் அறையில் உணவு வைக்கப்பட்டது. ஸ்டேடியத்தில் சில கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மழையின் காரணமாக உணவை வைக்க வேறு இடம் தேவைப்பட்டது என கூறப்படுகிறது.
கபடி வீரர்களை அவமரியாதை செய்யும் வகையில் வைரலான வீடியோக்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மாநில அரசை தாக்கி வருகின்றன.







