தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்; ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட…

தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமிக்க வேண்டும்; ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும் என்று பாமக தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள போதிலும், அது தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்போர் மத்தியில் எழுந்துள்ள கொந்தளிப்பை போக்கவில்லை.

தற்காலிகம் என்பதை தடை செய்துவிட்டு, தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகளை நடத்தி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,151 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் தற்காலிகமாக நியமிப்பதை பெற்றோர்கள் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை அனைத்துத் தரப்பினரும் கடுமையாக கண்டித்திருக்கின்றனர்.

ஆனால், தமிழக அரசோ இது தற்காலிக ஏற்பாடுதான், அடுத்த சில மாதங்களில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவார்கள் என்று விளக்கமளித்திருக்கிறது.
ஆசிரியர்கள் நியமனத்தில் நிலவும் அனைத்து குழப்பங்களுக்கும் தமிழக அரசு கடைபிடித்து வரும் ஒரே ஒரு தவறான கொள்கைதான் காரணம் ஆகும். அந்தத் தவறை சரி செய்துவிட்டால் அடுத்த ஒரு வாரத்திற்குள் காலியாக உள்ள அனைத்து இடைநிலை-பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் தகுதியான ஆசிரியர்களை எந்த சர்ச்சையுமின்றி நியமிக்க முடியும். அதற்கு அரசு மனம் வைக்க வேண்டும் என்பது தான் ஒரே தேவை.

இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஏற்கனவே தகுதித் தேர்வில் வெற்றி பெற்று தங்களின் திறமையை நிரூபித்து இருக்கின்றனர். அவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு தேவையில்லை என்பதுதான் பாமகவின் நிலைப்பாடும். பிற மாநிலங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார். போட்டித் தேர்வின் அடிப்படையில் இல்லை.

இதுவரை நடத்தப்படாத போட்டித் தேர்வுகளை இனியும் நடத்தாமல் இருப்பதே சமூக நீதி.
ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பதை தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசிடம் இருக்கும் நிலையில், அதற்கேற்ற எண்ணிக்கையிலான ஆசிரியர்களை முன்கூட்டியே தேர்வு செய்து கல்வியாண்டின் தொடக்கத்தில் நியமிப்பதை தமிழக அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.