பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டில் மகாபலிபுரத்தில் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடுகள் நடைபெற்றது. இரண்டு வருடமும் நடைபெற்ற மாநாட்டின்போது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் கூட்டம் நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ், அப்போதைய பாமக இளைஞர் அணி தலைவரும் தற்போதைய பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ், அப்போதைய தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணை நடைபெற்றது.
அப்போது பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, இந்த வழக்குகள் அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்குகள் என்றும், வழக்குகள் தொடர உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் வழக்குகளை ரத்து செய்ய
வேண்டும் என்று வாதிட்டு இருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்த நீதிபதி நிர்மல் குமார், இன்று தீர்ப்பளித்தார். அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
– இரா.நம்பிராஜன்








