ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி இளைஞர் சுரேஷ் “Bye Bye Miss U ரம்மி” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சுரேஷ் B.COM படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதற்காக முயற்சி
மேற்கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி
விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் 5 லட்சத்திற்கும் மேல் இழந்ததாகத் தெரிகிறது. மனமுடைந்த சுரேஷ், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணம் மற்றும் உறவினர்களிடம், நன்பர்களிடம் பணம் வாங்கி முழுமையாக ரம்மியில் இழந்து விட்டேன். மேலும், ஆன்லைன் ரம்மியில் இருந்து மீள முடியவில்லை எனவும், Bye Bye Miss U ரம்மி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சுரேஷின் தந்தை விஸ்வநாதன் கூறுகையில்,ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் உயிரிழப்புச் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் அடிப்படையில்
தற்போது என்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து மனம் உடைந்து உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆன்லைன் ரம்மி விளையாடி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா