பிரேசிலில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
வடகிழக்கு பெர்னாம்புகோ மாநிலம் ரெசிஃபி புறநகரில் 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு நேற்று காலை காலை 6 மணி அளவில் திடீரென இடிந்து அப்பளம் போல் சரிந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 8 பேர் உயிரிழந்தனர். இதில் இரு சிறுவர்களும் அடக்கம். கட்டிட இடிபாடுகளில் 5 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரெசிஃபி நகரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கட்டடம் உறுதித்தன்மை இல்லாததால் அங்கு குடியிருந்தவர்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதால் குடியிருப்புவாசிகள் அங்கிருந்து வெளியேறினர். ஆனால் சில காலத்திற்கு பிறகு அவர்கள் மீண்டும் அந்த கட்டடத்தில் குடியேறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





