நடப்பாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், தெற்கு ரயில்வேக்காக ரூ. 7,114 கோடி ஒதுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த நிதி ஒதுக்கீட்டின் விவரம், அகல பாதை திட்டங்களுக்காக ரூ.346.80 கோடி, சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் அமைக்க ரூ. 464 கோடி, இரட்டை பாதை திட்டங்களுக்கு ரூ. 381.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தண்டவாளங்களை புதுபிக்க ரூ. 1,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தென்னிந்தியாவின் 11 புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்திற்கும் இதில் இடமளிக்கப்பட்டிருக்கிறது. இதில், கேரளாவில் திருநின்னவாயா – குருவாயூர் (35 கி.மீ), அங்கமாலி – சபரிமலா (116 கி.மீ) ஆகிய இரண்டு திட்டங்களும், தமிழ்நாட்டில் அதில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை (70 கி.மீ), திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ), அத்திப்பட்டு-புத்தூர் 88.30 (கி.மீ), ஈரோடு-பழனி (91.05 கி.மீ), சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் (179.28 கி.மீ), மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி (143.5 கி.மீ), ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மொரப்பூர்-தருமபுரி (36 கி.மீ) என மொத்தம் 10 புதிய வழிதடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், 11வது திட்டமாக ராமேஷ்வரம் – தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இந்த ராமேஷ்வரம் – தனுஷ்கோடி திட்டத்திற்கு மட்டும் ரூ. 59 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, மேற்குறிப்பிட்ட 10 புதிய ரயில் பாதை திட்டத்திற்கு தலா ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இது நடப்பாண்டு பட்ஜெட்டின் சிறப்பம்சம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பாண்டிற்கான பட்ஜெட் புதிய இந்தியாவிற்கான பட்ஜெட்டாக இருக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.