பிஎஸ்என்எல் -இன் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தியாவின் 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 3 தனியாருடையது. அதாவது ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் ஆகும். இதில் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். பிஎஸ்என்எல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கியது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் -இன் புதிய லோகோ மற்றும் 7 புதிய சேவைகளை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி, நீல வண்ணத்தில் இருந்த பிஎஸ்என்எல் லோகோ, காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு, மலிவு மற்றும் நம்பகத்தன்மை (security, affordability and reliability ) என்ற வாசகங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல பிஎஸ்என்எல் சின்னத்துடன் கூடிய Connecting India என்னும் வாசகம் Connecting Bharat என்று மாற்றப்பட்டுள்ளது.
7 புதிய அம்சங்கள்
- ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க்
- பிஎஸ்என்எல் ஐஃஎப்டிவி (BSNL IFTV)
- டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி
- பைபர் டு தி ஹோம்
- பயனர்களுக்கு தேசிய Wi-Fi ரோமிங் சேவை
- என்கிரிப்டட் கம்யூனிகேஷன் ஃபார் டிஸாஸ்டர்ஸ்
- நிலக்கரி சுரங்கத்துக்கு பிரத்யேக 5ஜி நெட்வொர்க்

இதில் ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் மூலம் பயனர்கள் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க வழிவகுக்கிறது. டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி மூலம் பயனர்கள் தடையில்லா நெட்வொர்க் இணைப்பை சாட்டிலைட் மற்றும் நிலத்தில் உள்ள மொபைல் நெட்வொர்குகள் மூலம் பெறலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.







