சேலத்தில் காலை உணவுத் திட்டத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் இரண்டாம் கட்டமாக சேலம் மண்டலத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இரண்டாவது நாளான இன்றும் முதலமைச்சர் நேரடி கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கள ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவுதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 54 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் முதன்முறையாக தொடங்கப்பட்ட நிலையில், நெத்திமேடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியில் உள்ள 54 அரசு துவக்கப் பள்ளிகளில் இத்திட்டம் துவங்கப்பட்டது. இதற்காக சேலம் மாநகரப் பகுதிகளில் 5 இடங்களில் சமையல் கூடங்களில், உணவு தயாரிக்கப்பட்டு 54 பள்ளிகளுக்கும் கொண்டுவரப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனையும் படியுங்கள் : திருமங்கலத்தை விஞ்சும் ஈரோடு பார்முலா- ஜெயக்குமார் விமர்சனம்
இந்த நிலையில் சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
“காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளது. பள்ளியின் வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்தோம். மாணவர்கள் தங்கள் பள்ளியில் உள்ள குறைகளை தெரிவித்துள்ளனர் அவை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
– யாழன்









