பிரேசில் தேர்தலில் தற்போதைய அதிபர் போல்சனரோவை வீழ்த்தி லூலு டா சில்வா வெற்றி பெற்றுள்ளார். முதல்முறையாக பதவியில் இருக்கும் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். இந்த வெற்றி மூலம் பிரேசில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சிக்கட்டிலில் அமரும் நிலை உருவாகியுள்ளது.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தல் போட்டிக் களத்தில் பலர் இருந்தாலும் தற்போதைய அதிபரும் தீவிர வலதுசாரி ஆதரவாளருமான போல்சனரோ, முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த லூலு டா சில்வாவுக்குமே போட்டி இருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே லூலு டா சில்வாவுக்கே ஆதரவாக இருந்தன. கொரானா தொற்று, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் அதிபர் போல்சனரோவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் எழத்தொடங்கின.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிபர் போல்சனரோ 49.10 சதவிகித வாக்குகளும், முன்னாள் அதிபர் 50.90 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் இடதுசாரி தலைவரும் முன்னாள் அதிபருமான லூலு டா சில்வா மீண்டும் அதிபராக உள்ளார். பிரேசில் தேர்தல் நடைமுறையின் படி 50 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற லூலு டா சில்வா அடுத்த ஆண்டு பிரேசிலின் அதிபராக மீண்டும் பதவியேற்க உள்ளார். 77 வயதாகும் லூலு டா சில்வா தீவிர இடதுசாரி அரசியல்வாதி ஆவார். லூலு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பிரேசில் அதிபராக பதவி வகித்துளார். 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த லூலு, தற்போது நடைபெற்ற தேர்தலில் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். லூலுவை விட குறைவான வாக்குகள் பெற்றிருப்பதால் அதிபராக இருக்கும் போல்சனரோ ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிரேசில் தேர்தல் அங்கு மட்டுமல்லாமல் அண்டை நாடுகளின் கவனத்தையும் ஈர்க்க செய்தது. மீண்டும் போல்சனரோ வெற்றிபெறும் பட்சத்தில் அமேசான் காடுகள் மேலும் அழிக்கப்படும் என்பதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த தேர்தலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
லூலு வெற்றிபெற்ற பின் ஆற்றிய முதல் உரையிலேயே, அமேசான் காடுகள் பாதுகாக்கப்படும் எனவும், மக்களின் வறுமை போக்கப்படும் என்றும் அறிவித்திருப்பது அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.