வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடனை வசூலிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்களை நியமனம் செய்கின்றன. அவர்கள் கடன் பெற்றவர்களை எக்காரணம் கொண்டும் மிரட்டக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, கடனை வசூலிப்பது குறித்து, கூடுதலாக சில புதிய விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், கடனை வசூலிக்கும் முகவர்கள் எக்காரணம் கொண்டும் கடன் வாங்கியவர்களை வார்த்தைகளாலோ, அல்லது உடல்ரீதியாகவோ மிரட்டவோ, துன்புறுத்தவோ கூடாது என அறிவுறுத்தி உள்ளது.
மேலும், கடன் வாங்கியவர்களுக்கு, எந்த ஒரு தகாத குறுஞ்செய்திகளையும் அனுப்பக் கூடாது என்றும் தெரிவித்துஉள்ளது. அத்துடன், அச்சுறுத்தும் வகையிலான அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், காலை 8 மணிக்கு முன்பும், மாலை 7 மணிக்கு பின்பும் அவர்களை போனில் அழைக்கக் கூடாது என்றும் தெரிவித்துஉள்ளது.
கடன் வாங்கியவர்களை அகால நேரத்தில் அழைத்து மிரட்டுவது உள்ளிட்டவை கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தி உள்ள நிலையில், அண்மைக் காலமாக, கடனை வசூலிப்பதற்காக நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை வங்கிகளும், வங்கிகள் சாரா நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








