ராஜினாமா செய்கிறாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

இங்கிலாந்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பதவி விலகியுள்ள நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பதவி விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளான…

இங்கிலாந்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பதவி விலகியுள்ள நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பதவி விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்கும் உள்ளான முன்னாள் அமைச்சரான கிறிஸ்டோபர் பின்ச்சர் என்பவரை, பிரதமர் போரிஸ் ஜான்சன் துணை தலைமை கொறடாவாக நியமித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, பின்ச்சர் நியமனத்திற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்க மன்னிப்பு கோரினார்.

எனினும், பின்ச்சரின் பின்னணி குறித்து ஜான்சனுக்கு ஏற்கனவே தெரியும் என்றும் தெரிந்தே அவர் தவறிழைத்துள்ளார் என்றும் இது அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு எதிரானது என்றும் கூறி நிதி அமைச்சர் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து சுகாதரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்தும் தனது பதவியை ராஜினாமா செய்தார். வடக்கு அயர்லாந்து அமைச்சர் பிராண்டன் லீவிஸ், மற்றொரு நிதி அமைச்சர் ஹெலன் வாடெலி, பாதுகாப்பு அமைச்சர் டாமியன் ஹிண்ட்ஸ் உள்பட பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இதுவரை தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும், தான் ராராஜினாமா செய்யப் போவதில்லை என்றும், அதற்கான அவசியம் எழும் வரை பதவியில் தொடரப் போவதாகவும் போரிஸ் ஜான்சன் கூறி இருந்தார். மேலும், ராஜினாமா செய்தவர்களுக்குப் பதில் புதியவர்களை பொறுப்புகளில் நியமித்தார்.

இந்நிலையில், அதிருப்தி அதிகரித்து வருவதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா செய்துவிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.