டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில், பாஜகவின் யுவ மோர்ச்சா தேசிய செயலாளர் தஜிந்தர் சபால் சிங் பக்காவை போலீஸார் டெல்லியில் கைது செய்தனர்.
தஜிந்தர் சபால் சிங் சமூக வலைதளங்களில் மிக கடுமையான பதிவுகளை வெளியிட்டு வந்தார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவுகளைப் பதிவு செய்திருந்தார். இதையடுத்து, பஞ்சாப் போலீஸார் தஜிந்தர் மீது வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தஜிந்தருக்கு சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது.
ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராக மறுத்து வந்த நிலையில், டெல்லிக்கு வந்த பஞ்சாப் போலீஸார் தஜிந்தர் சபால் சிங்கை கைது செய்து, மொகாலிக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில், தஜிந்தரை மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக அவரது தந்தை டெல்லி போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், ஹரியாணா வழியாக வந்த பஞ்சாப் போலீஸ் வாகனத்தை ஹரியாணா போலீஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர், டெல்லி போலீஸாரிடம் தஜிந்தர் சபால் சிங் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து, பஞ்சாப் போலீஸார் ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர்.








