கோயம்பேடு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது பாஜக – விசிக இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.
சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க விசிகவினர் வருகை வந்தனர். அதேபோல, பாஜக கலைப்பிரிவு நிர்வாகி காயத்ரி ரகுராம் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் வருகை தந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அம்பேத்கர் சிலை முன்பாக இருந்த பாஜக கொடியை அகற்றிவிட்டதாக பாஜவுக்கும் விசிகவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். உடனே அம்பேத்கர் சிலை மேடை மீது ஏறிய காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு விசிகவினருக்கும் முழக்கங்கள் எழுப்பினர்.
மோதலை முடிவுக்குக் கொண்டு வர சமாதானப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அதனையும் மீறி மோதல் தொடர்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை இணை ஆணையர் ராஜேஸ்வரி மற்றும் அண்ணாநகர் துணை ஆணையர சிவ பிரசாத் ஆகியோர் விசிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இணை ஆணையர் ராஜேஸ்வரி திருமாவளவனுடன் போனில் பேசியதை அடுத்து சமாதானம் ஏற்பட்டதால் விசிகவினர் கலைந்து சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுச் சென்றனர்.