”வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி பாஜக நாட்டை பிளவுபடுத்தி வருகிறது” என பாட்னாவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர் கொள்ள, எதிர்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் இன்று நடைபெறுகிறது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன், உத்தவ் தாக்கரே, சரத்பவார், உமர் அப்துல்லா மற்றும் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் பாட்னாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்ததாவது..
“இந்தியாவில் சிந்தாந்த அடிப்படையில் யுத்தம் துவங்கியுள்ளது. ஒருபுறம் காங்கிரஸ் கட்சி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் சித்தாந்தம் மறுபுறம் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இன் பிரிவினை சிந்தாந்தம்.
பாஜக வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி நாட்டினை பிளவுபடுத்தி வருகிறது. காங்கிரஸ் அன்பு மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி செயல்பட்டு வருகிறோம். பாட்னாவில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகளின் இந்த கூட்டம் பாஜகவை வீழ்த்துவதற்கானது.
தெலங்கானா , மத்திய பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம். இனி பாஜகவை இனி எங்குமே காண இயலாது. காங்கிரஸ் ஏழைகளுடன் இருக்கிறது அதனால் வெற்றி பெறுவோம். ஆனால் பாஜக பணம் படைத்த சிலருடன் இருக்கிறது.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்காத நிலையில் அக்கட்சியின் எம்பியான ராகவ் சத்தா பங்கேற்றுள்ளார். தெலங்கானா மாநில முதலமைச்சரும், ‘பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகரராவ் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.