”பாஜக அரசு சில கோடீஸ்வரர்களுக்காக செயல்படுகிறது “ என கர்நாடகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கும் திட்ட விழாவில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநில சட்டப் பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து இருந்தது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, கடந்த ஜூன் 2ஆம் தேதி முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிடப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, பசுவதை தடைச் சட்டம் ரத்து என பல அதிரடியான அறிவிப்புகளை கர்நாடக மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை போன்றே கர்நாடகத்திலும் மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் ‘குடும்பலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி தொடக்கிவைத்தார். ‘குடும்பலட்சுமி’ திட்டத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ராகுல் காந்தி தொடக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலமாக 1.33 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 18 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த விழாவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி தெரிவித்ததாவது…
“ கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நீங்கள் கவனித்தால், அவற்றில் ஐந்தில் நான்கு திட்டங்கள் பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களை வலிமைப்படுத்துவதில் எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினால் அதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்யும்.
மத்திய அரசு சில கோடீஸ்வரர்களுக்காகவும் அவர்களின் நெருங்கிய நண்பர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஐந்து திட்டங்களை முதன்மையான திட்டமாக அறிமுகப்படுத்தினோ. கோடீஸ்வரர்களுக்காக அல்லாமல் ஏழை எளிய மக்களுக்காக அரசு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்” என ராகுல் காந்தி தெரிவித்தார்.