திறப்பு விழாவையொட்டி சலுகை அறிவித்த பிரியாணி கடையை முதல்நாளே மூடும்படி ஆட்சியர் உத்தரவிட்ட சம்பவம் காட்பாடியில் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி வேலூர் சாலையில் இன்று புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை ஒன்று, திறப்பு விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து காலை கடை திறக்கப்பட்ட உடனேயே சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் கடை முன் குவிந்திருந்தனர். மதியம் உச்சி வெயிலையும்
பொருட்படுத்தாத மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் குடை பிடித்த படியும் கையால் முகத்தை மறைத்த படியும் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தனர். இதனால் காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அவ்வழியாக சென்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீரென காரை விட்டு இறங்கி கடையில் ஆய்வு செய்தார். அப்போது தங்கள் கடையை நம்பி வந்த வாடிக்கையாளர்களுக்கு வெயிலில் அவதி படாதவாறு நிழல் குடைகளோ, இருக்கை வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் வாடிக்கையாளர்களை அவதிக்குள்ளாக்குவதாகவும் கூறி உடனடியாக பொதுமக்களை கலைந்து செல்லும்படியும்., கடைக்கு சீல் வைக்கும் படியும் உத்தரவிட்டார்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்றிதழை பெறாமல் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து கடை முன்பு குவிக்கப்பட்ட காவல் துறையினர் சலுகை விலை பிரியாணியை வாங்க குவிந்திருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மக்களை திருப்பி அனுப்பினர். இதனால் பிரியாணி வாங்கி வந்த மக்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் முறையான ஏற்பாடு மற்றும் மாநகராட்சியின் தொழில் உரிமம் சான்று பெறாத கடைக்கு சீல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதோடு முறையான தொழில் உரிமம் சான்றிதழ் பெறாததால் கடை உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். அதிரடி ஆப்பரை வெளியிட்டு மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் புதியதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை மூடப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பி.ஜேம்ஸ் லிசா