சென்னை மாநகராட்சி பணியாளர்களின் வருகை பயோ மெட்ரிக் முறையில் விரைவில் பதிவு செய்யப்பட உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாளர்களின் வருகைப் பதிவினை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 14,897 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களிலும், அம்பத்தூர் மண்டலத்தில் பகுதி அளவும் தூய்மைப் பணி மற்றும் சாலைப் பணிகளில் ஈடுபடும் 9,046 நபர்களும் அடங்குவர். திருவொற்றியூர். மணலி, மாதவரம் ஆகிய மண்டலங்களில் திருவாளர் சென்னை என்விரோ
பிரைவேட் லிமிடெட் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளில் 3,220
பணியாளர்களும், தேனாம்பேட்டை கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் அடையாறு,
பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் திருவாளர் உர்பேசர்
அமீத் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளில் 10,839
பணியாளர்களும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாளர் சென்னை என்விரோ பிரைவேட் லிமிடெட் மற்றும் திருவாளர் உர்பேசர்
சுமீத் நிறுவனத்தின் சார்பில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் மண்டலங்களில்
ஏற்கனவே பயோ மெட்ரிக் முறையில் வருகைப் பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டு
வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலகங்களில் பணியாளர்களின் வருகைப் பதிவானது பதிவேட்டில் கையொப்பமிடும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மைப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் வருகைப் பதிவு ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது பணி வருகையின் போது ஒரு முறையும், பணி முடிந்து திரும்பும் போது ஒரு முறையும் பெறப்படுகிறது.
பணியாளர்களின் வருகைப் பதிவினை சரியான நேரத்தில் இருப்பதை உறுதி செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியில் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த பயோ மெட்ரிக் முறையில் பணியாளரின் வருகை முகப்பதிவு (Face Detection) முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை பின்பற்றும் வகையில் தலைமை அலுவலகத்தில் 10, வட்டார அலுவலகங்களில் 3, ஒரு மண்டல அலுவலகத்திற்கு 2 என 15 மண்டல அலுவலகங்களில் 30. பகுதி
அலுவலகங்களில் 47. வார்டு அலுவலகங்களில் 200, வாகன நிறுத்த இடங்களில் 20
மற்றும் இதர இடங்களுக்கு 5 என மொத்தம் 315 எண்ணிக்கையிலான பயோ மெட்ரிக் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்ட அலுவலகங்களில் பயோ மெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தும் பணி
தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவுற்றவுடன் விரைவில் பணியாளர்களின் வருகை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட உள்ளது.
-மணிகண்டன்








