தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும்-அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி மேலும் பேசியதாவது:…

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும் என்று தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி மேலும் பேசியதாவது:

அண்ணாநகர் தொகுதியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவர் எம்.எல்.ஏ., மோகன். மகளிருக்கே உரியது முணுமுணுப்பு பிரசாரம். எல்லா விஷயங்களையும் பிறரிடம் பரப்புவதே மகளிரின் வேலை. நான் கூட பி.யூ.சி., படிக்கும்போது டாக்டராக வேண்டும் என்று நினைத்து தான் படித்தேன்.

இன்று தமிழ்நாட்டில் அதிகளவில் உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி தான். பெண்கள் படிக்க இயலாத காலம் இன்று மாறியிருக்கிறது. காலத்துக்கேற்ற வகையில், பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். எந்தத் துறை மாணவர்களாக இருந்தாலும் அவர்கள் Inter Disciplinary படிப்புகளைக் கற்க வேண்டியது அவசியம்.

மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க, ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட வேண்டும். புதுமைப் பெண் திட்டம், 7.5% இட ஒதுக்கீடு, பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மதம், மொழி, இனத்தை சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காகவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாக தொடங்கப்பட்டன.

ஆங்கிலேயர் காலம் முதல் கிறிஸ்தவ மிஷனரிகள் தான் பலரையும் படிக்க வைத்து வருகின்றனர். சிறுபான்மை சமுதாயமும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பதே திராவிட மாடல் ஆட்சி.

தாய்மொழி தமிழும், International Language ஆங்கிலமும் இருக்கும்போது பிற மொழிகள் எதற்கு? மூன்றாவதாக இன்னொரு மொழியை படிக்க வேண்டுமென்றால் தாராளமாக படித்துக்கொள்ளலாம்; ஆனால் அதை கட்டாயப்படுத்தக் கூடாது.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் அமலில் இருக்கும்.  3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது; அப்படி பொதுத் தேர்வு கொண்டுவந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும்; 10, 12-ம் வகுப்பில் பொதுத் தேர்வு இருந்தால் போதுமானது.

மருத்துவம் படித்து மருத்துவர்கள் தனியே தொழில் தொடங்குவது போல் பொறியாளர்களும், இதர துறை மாணவர்களும் தொழில் தொடங்கி தொழில்முனைவோராக வர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.