பாரக்பூர் திரிணாமூல் காங். வேட்பாளர் வெற்றி பெறுவார் என பரவும் கருத்துக் கணிப்பு போலியானது – உண்மை என்ன?

This news fact cheked by Bangla AajTak 5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பார்த்தா பௌமிக் பாரக்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவார் என கருத்துக்…

This news fact cheked by Bangla AajTak

5ம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பார்த்தா பௌமிக் பாரக்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்புகள் சொல்வதாக ஒரு ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதன் உண்மைத்தன்மை குறித்து பங்களா ஆஜ்தக் தொலைக்காட்சி ஆய்வுக்குட்படுத்தியது.  இது குறித்து விரிவாக காணலாம்.

மேற்கு வங்க மாநிலத்தில் கருத்துக் கணிப்புகள் குறித்து பரவும் ஸ்கிரீன் ஷாட் உண்மை என்ன? 

மக்களவைத் தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி மாலை 6 மணியளவில் நிறைவடைகிறது.  6 மாநிலங்கள்,  2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.  இதில் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள்,  மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள்,  மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள்,  பீகார் மற்றும் ஒடிசாவில் 5 தொகுதிகள்,  ஜார்க்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் பங்கான்,  பாரக்பூர்,  ஹவுரா,  உலுபெரியா,  ஸ்ரீராம்பூர்,  ஹூக்ளி மற்றும் ஆரம்பாக் ஆகிய 7 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் ஏபிபி ஆனந்த் தொலைக்காட்சியின் ஸ்கிரீன் ஷாட் ஒன்று  நேற்று  சமூக ஊடகங்களில் வைரலானது.  அதன்படி பாரக்பூர் தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பார்த்தா பௌமிக் வெற்றி பெறுவார் என அந்த கருத்துக் கணிப்பு அடங்கிய ஸ்கிரீன் தெரிவித்தது.

பொதுவாகவே பல்வேறு ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகள் வாக்காளர்களின் மனதில் தாக்கம் செலுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.  இதன் ஒருபகுதியாகவே  பாரக்பூரில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளிலிருந்தே ஏபிபி ஆனந்தின் கருத்துக்கணிப்பு அடங்கிய ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது.

கருத்துக் கணிப்பு ஸ்கீரீன் ஷாட் போலியானது :

சமூக வலைதளங்களில் பரவும் ஸ்கிரீன் ஷாட் குறித்து அதன் உண்மைத் தன்மையை இந்தியா டுடே  செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது.  அதன் படி இந்த ஸ்கிரீன் ஷாட் போலியானது என்று கண்டறியப்பட்டது.  ஏபிபி ஆனந்த் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி உண்மையில் அர்ஜுன் சிங்தான் வெற்றி பெறுவார் என சொல்லப்பட்டது.

பாரக்பூர் மக்களவைத் தொகுதி தொடர்பான கருத்துக் கணிப்பை ABP ஆனந்த் எப்போது நடத்தியது என இந்தியா டுடே நிறுவனம் அந்த ஸ்கிரீன் ஷாட்டின் கீ வேர்ட் செர்ச் மூலம் மூலம் தேடியது.  அதன் முடிவில் ஏப்ரல் 12 ஆம் தேதி ஏபிபி ஆனந்தின் யூடியூப் சேனலில் “சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு (பாகம் 2)” என்ற தலைப்பில் வீடியோ பதிவேற்றப்பட்டது.
வீடியோவில் சரியாக 41 நிமிடங்கள் 25 வினாடிகளில்,  பாரக்பூர் கருத்துக் கணிப்பு  வெளியடப்பட்டது.  திரிணாமுல் சார்பில் பார்த்தா பௌமிக், பாஜக சார்பில் அர்ஜூன் சிங், சிபிஎம் கட்சி சார்பில் தேவ்தத் கோஷ் ஆகியோர் கருத்துக் கணிப்பில் பரிந்துரைக்கப்பட்டனர்.

உண்மையான வீடியோவின் முடிவின் படி திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பார்த்தா பௌமிக் மற்றும் பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங் ஆகியோருக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என குறிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால் போலியாக பரவும் ஸ்கிரீன் ஷாட்டில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளார் வெற்றி பெறுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல போலியாக பரவும் ஸ்கிரீன் ஷாட் குறித்து பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் உண்மை மற்றும் போலி ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்திருந்தார்.  மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

முடிவு : 

பாரக்பூர் தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என பரவும் கருத்துக் கணிப்புகள் அடங்கிய ஸ்கிரீன் ஷாட் போலியானது என அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

This story was originally published by  Bangla AajTak and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective….

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.