சபரிமலை அரவணப் பிரசாதம் விற்பனைக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அரவணப் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். அரவணப் பிரசாதத்திற்காக தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய்களில் குறைந்தபட்ச அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி (எம்ஆர்எல்) பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்க்கப்பட்டு இருந்ததால் சபரிமலையில் ‘அரவணப் பிரசாதம்’ விற்கக்கூடாது என்று திருவிதாங்கூர் தேவசுவம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரவணப் பிரசாதம் பக்தர்களுக்கு விற்கப்படாமல் இருக்க, உணவு பாதுகாப்பு ஆணையர், சன்னிதானத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, FSSAI அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சபரிமலையில் அரவணப் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் 14 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, ஏலக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணா தொகுப்புகளின் விற்பனையை நிறுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் 6,65,159 அரவணப் பிரசாதம் அடங்கிய டின்களை அழிக்கபட்டன. இதனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
– யாழன்







