பேடிஎம் வங்கி சேவைகளுக்கு தடை | ரிசர்வ் வங்கி அதிரடி…!

வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது.  பலரும் டிஜிட்டல்…

வரும் பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தியாவில் டிஜிட்டல் பணப்புழக்கம் கடந்த சில ஆண்டுகளில் பலமடங்கு அதிகரித்துள்ளது.  பலரும் டிஜிட்டல் சேவைகளை கொண்டு பணத்தை செலவிட துவங்கியுள்ளனர்.  அந்த வகையில், நாடு முழுக்க டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவை வழங்குவதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக பேடிஎம் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி வந்ததால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2022 ஆண்டு பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.

வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பேமண்ட்ஸ் பேங்க் செயல்பாடுகளுக்கு தடை விதித்துள்ளது.  இந்த உத்தரவின் மூலம் பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க்-இல் பணத்தை போடுவது,  கடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது,  பிரீபெயிட் சேவைகள், வாலெட்டுகள்,  ஃபாஸ்டேக் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியாது.

வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஃபாஸ்டேக், சேமிப்பு அக்கவுண்ட், நடப்பு அக்கவுண்ட் உள்ளிட்டவைகளில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். ஆனால், வங்கி சார்பில் பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு பண பரிமாற்றங்களை அனுமதிக்கக்கூடாது. பயனர்கள் தொடர்ந்து பேடிஎம் யுபிஐ சேவையை பயன்படுத்தலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.