மழைக்காலத்தில் சீரான மின்வினியோகம்- அமைச்சர்

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு மின்வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர்…

மின்சார கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு மின்வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் துறை வாரியான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பெருமழை பெய்து வரும் நிலையில் மின்வாரிய துறையில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் தற்பொழுது நடைபெற்றது.

இதுவரை 10,77,910 பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சீரான மின் வினியோகம் வழங்குவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது. சீரான மின் வினியோகம் வழங்கும் வகையில் 1,33,200 மின்கம்பங்கள் தயாராக உள்ளது. 10,000 கிலோ மீட்டர் அளவிலான மின் கம்பிகள் தயாராக உள்ளது. தற்போது வரை 6,9000 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மின்வாரிய உயர் அதிகாரிகள் இரவு நேரங்களிலும் சிறப்பு பணிகளில் ஈடுபட்டு சீரான மின் வினியோகம் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளது.

மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நான்காண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக குழு ஒன்றை முதல்வர் அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஓரிரு நாட்களில் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.

அண்ணாமலை என்ன அமலாக்கத்துறை இயக்குநரா? மத்திய அரசு அமலாக்கத்துறையை எப்படி செயப்படுத்துகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. மின் கட்டணம் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு மின்வாரியத்திற்கு எழுதிய கடிதத்தை வெளியிட முடியாது. அமைச்சராக பதவி ஏற்கும் பொழுது சத்தியபிரமாணம் செய்துள்ளேன். இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.