நாட்டை விட்டு வெளியேற 81 சீனர்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக மத்திய உள்தறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் விளக்கம் அளித்த அவர், விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருப்பது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது போன்ற காரணங்களின் கீழ் சீனாவைச் சேர்ந்த 726 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இவர்களில் 117 பேர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்த நித்யானந்த ராய், 81 பேருக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்கள் குறித்த ஆவணம் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த நித்யானந்த ராய், அவ்வாறு வருபவர்களில் சிலர் அறியாமை காரணமாகவும், மருத்துவ அவசரம் போன்ற காரணங்களாலும் விசா காலத்திற்குப் பிறகும் இங்கேயே தங்கி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
உள்நோக்கத்துடனோ, நியாயப்படுத்த முடியாத காரணங்களுடனோ விசா காலத்திற்குப் பிறகும் தங்கி இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வெளிநாட்டுச் சட்டம் 1946ன் படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் குறிப்பிட்டார். அத்தகையவர்களுக்கு எதிராக நாட்டை விட்டு வெளியேற நோட்டீஸ் அனுப்புவது, அபராதம் விதிப்பது ஆகியவை பின்பற்றப்படுவதாக அவர் கூறினார்.








