நடிகர் சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்பதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமரின் வருகை மற்றும் பாதுகாப்பு குறித்து பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். திரைப்பட நடிகரான சித்தார்த், தனது ட்விட்டரில் சாய்னாவின் பதிவை குறிப்பிட்டு, அதை இரட்டை அர்த்தத்தில் கேலி செய்யும் விதமாக ட்வீட் செய்தார். அந்த பதிவு வைரலாகி பெரும் சர்ச்சையையும், கடும் எதிர்ப்புகளையும் உருவாக்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பாக, சாய்னா நேவாலுக்கு அவர் எழுதிய கடிதத்தில், சில நாட்களுக்கு முன் நீங்கள் வெளியிட்ட ட்வீட்டுக்கு, தாம் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். தங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது தனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட தனது தொனியையும் வார்த்தைகளையும் மாற்றியிருக்கலாம் என்றும், அதனை நியாயப்படுத்த முடியாது என்றும் நடிகர் சித்தார்த் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சாய்னா நேவால் மற்றும் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் குறித்து சர்ச்சை பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதன் அடிப்படையில், டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்படி இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது.
இதனிடையே டெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றுள்ள சாய்னா நேவால், சித்தார்த் மன்னிப்பு கோரியது குறித்து பேட்டியளித்தார். சித்தார்த் மன்னிப்பு கோரியது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்ட சாய்னா, ஒரு பெண் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கக் கூடாது என கூறினார்.