B.E., B.Tech. கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரத்தை இன்று மாலைக்குள் பதிவிட வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்வு, இணையவழியாக 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 1,51, 871 இடங்களில் 89,187 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்தனர். மேலும், முதல்கட்ட கலந்தாய்வில் நிரப்பாமல் விடப்பட்ட இடங்களுக்கான துணை கலந்தாய்வில் 5,882 இடங்கள் நிறப்பப்பட்டன.
மொத்தமாக 95 ஆயிரத்து 69 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 56 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், B.E., B.Tech., கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனரா, இல்லையா என தெரிவிக்க தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலைக்குள் மாணவர்களின் விவரங்களை பதிவிட வேண்டும் என அனைத்து வகை பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் ஆணையிட்டுள்ளது.







