மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் காதி ஆடைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி பவனில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி
சிறப்பு தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். விற்பனையை தொடங்கி வைத்த பின்பு ஆதரவற்ற ஆசிரமக் குழந்தைகளுக்கு இலவச ஆடைகளை ஆளுநர் வழங்கினார். மேலும் கைத்தறி துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, “இரண்டாவது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி தீபாவளி விற்பனையை தொடங்கி வைக்கிறார். 1957ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காதி கிராம பவனில் கடந்த ஆண்டு 21 கோடிக்கு ஆடைகள் விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டில் கதர் கிராம வாரியத்தில் இதுவரை 11 கோடியை 52 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் காதியின் புதிய வடிவங்களை விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் காதி மற்றும் கைத்தறி ஆடைகளை 1 கோடிக்கு விற்பனை செய்ய அமிட் பல்கலைகழகத்தில் விற்பனையை தொடங்கி வைத்துள்ளேன். பொதுமக்கள் காதி ஆடைகளை அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டு கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
தமிழில் வணக்கம் என்று கூறி தன் உரையை ஆரம்பித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “நம் நாட்டிற்கும், உலகிற்கும் இன்று மிக மிக முக்கியமான நாள். மகாத்மா காந்தி ஒரு அரசியல் தலைவர் மட்டுமல்ல. அவர் குறிக்கோள் கொண்ட சிறந்த மனிதர். அவர் எல்லாருக்கும் அன்பானவராகவும், ஏழை மக்களுக்கு நெருக்கமான தொடர்பில் இருந்தார். நிறைய பன்முகதன்மை கொண்ட இந்திய நாட்டில் காந்தியின் தத்துவம்,சிந்தனை, கற்பித்தல் எல்லாம் நாட்டின் தேவை பற்றியும் ஏழைகளைப் பற்றியுமே இருந்தது.இதற்கு முன்பு
இருந்ததை விட தற்போது நமக்கு மகாத்மா காந்தி மிகவும் அதிகமாக தேவைப்படுகிறார். ஒவ்வொரு பகுதியில் ,சமூகத்தில் உள்ள நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து வளர்ந்தால் தான் நம் நாடு வளரும்.
நாட்டின் ஜவுளித்துறை வளர்ச்சியை மேம்படுத்தவே காந்தியடிகள் சுதேசி இயக்கத்தை தொடங்கினார். காதி நாட்டின் ஒரு சிறந்த ,சக்தி வாய்ந்த சின்னமாக விளங்குகிறது. தமிழ்நாடு அரசு காதி விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காதியை பற்றி மாணவர்கள் இடத்திலும் இளைஞர்கள் இடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விற்பனையாளர்கள் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து காதியை விளம்பரப்படுத்த வேண்டும். எல்லாரும் காதியை வாங்க வேண்டும் காதியை அணிய வேண்டும். உலக அளவில் காதி வித வித வடிவங்களில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் நிறைய புதிய வடிவங்களை நாம் தயாரிக்க வேண்டும்” என கூறினார்.







