ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த வர்மனின் காட்சியை சென்னை போலீஸ் மீம் போட்டு விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இதுவரை ஜெயிலர் திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ₹ 640 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ₹ 650 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த வர்மனின் காட்சியை வைத்து விழிப்புணர்வுக்காக மீம் போட்ட சென்னை போலீஸை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாகி உள்ளதால், அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஐடியாவை போலீசார் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.
டிரெண்டிங்கில் உள்ள விஷயத்தை வைத்து விழிப்புணர்வு செய்தால் அது மக்கள் மத்தியில் நன்கு ரீச் ஆகும் என்பதால், தற்போது சென்னை டிராபிக் போலீஸ் ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக வீடியோ மீம் ஒன்றை தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிட்டு உள்ளது.
அந்த வீடியோவில் ஜெயிலர் படத்தில் வில்லன் விநாயகன் பேசிய, சின்ன வயசுல இருந்து ஒரு ஆசை… ஆசைனா பெரிய ஆசை ஒரு பொருள் மேல என்கிற டயலாக்கை பதிவிட்டு ஹெல்மெட்டை இறுதியாக காட்டி உள்ளனர். ஹெல்மெட் விழிப்புணர்வுக்காக சென்னை டிராபிக் போலீஸ் போட்ட இந்த வீடியோ மீம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், இது ஒரு வில்லங்கத்தில் சிக்கி உள்ளது.
ஜெயிலர் திரைப்படம் நாளை தான் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்னரே அப்படத்தின் ஹெச்.டி பிரிண்ட் பைரசி தளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டது. அப்படி திருட்டுத்தனமாக வெளியான படத்தை டவுன்லோடு செய்து அதிலிருந்து சில காட்சிகளை கட் பண்ணி தான் இந்த மீமை சென்னை டிராபிக் போலீஸ் டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளனர்.
இதனால் நெட்டிசன்கள், விதிகளை மதிக்க சொல்லும் நீங்களே இப்படி விதிமீறலில் ஈடுபடலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி படத்தில் விநாயகன் வைரத்தை திருடுவதற்காக தான் அந்த டயலாக்கை பேசி இருப்பார். இதன்மூலம் ஹெல்மெட்டை திருட சொல்கிறீர்களா என்றும் சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இந்த மீம் வைரலாகி வருகிறது.







