அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா – நாயன்மார்களுக்கு காட்சியளித்த பஞ்சமூர்த்திகள்!

அவிநாசியில் உள்ள  அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள்,  63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.  திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழ்நாட்டின் 3-வது மிகப்பெரிய தேர் கொண்டதும்,  சுந்தரமூர்த்தி நாயணாரால் பாடல் பெற்றதும்,  கொங்கேழு…

அவிநாசியில் உள்ள  அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள்,  63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் வெகுசிறப்பாக நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழ்நாட்டின் 3-வது மிகப்பெரிய
தேர் கொண்டதும்,  சுந்தரமூர்த்தி நாயணாரால் பாடல் பெற்றதும்,  கொங்கேழு
சிவாலயங்களுள் முதன்மைபெற்றதும் என்பது மட்டுமல்லாமல்,  காசியில் வாசி அவிநாசி
என்ற போற்றுதலுக்கு உரியதும் பழமை வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரைத் தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  இதனை தொடர்ந்து 15 ஆம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சிகளும்,  16 ஆம் தேதி அதிகார நந்தி,  கிளி,  பூதம் அன்ன வாகன காட்சிகளும் நடைபெற்றது.  தொடர்ந்து 17 ஆம் தேதி புஷ்ப பல்லக்கு,  கைலாச வாகன காட்சிகளும் நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை தேர்த் திருவிழாவின் முக்கிய தினங்களில் ஒன்றாக கருதப்படும் ஐந்தாம் திருநாளான,  பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும்
நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  மூசிக வானத்தில் விநாயக பெருமானும்,  ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும்,  காமதேனு வாகனத்தில் கருணாம்பிகையம்மனும்,  மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய பெருமானும்,  ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும்,  கருடவாகனத்தில் கரிவரதராஜ பெருமாளும், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எழுந்தருளியுள்ள பஞ்சமூர்த்திகள் முன்பாக வந்து பூஜைகள் செய்யப்பட்டது. இத்திருவிழாவில் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பெண்கள்,  குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர்.

இதனையடுத்து வருகின்ற 21ஆம் தேதி காலை திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி துவங்கி 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.