மதுரையில் கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரம் நடைபெற்றபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசியது தவறு தான். இது குறித்து நான் மதுரை புறநகர் நிர்வாகி உடன் பேசி இருந்தேன். நான் பேசியதாக வெளியிடப்பட்ட ஆடியோ உண்மைதான்.
ஆனால் அதில் திமுகவினர் ஒரு சில வார்த்தைகளை நீக்கியும் சேர்த்தும் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவை முழுவதுமாக வெளியிட வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தை இரண்டாக பிரிப்போம் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
நான் செய்யக்கூடிய அரசியல் பாணியை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.
மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் விரும்பத்தகாத சம்பவம். நாட்டிற்கு உயிர் தியாகம் செய்தவருக்கு மரியாதை கொடுப்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.








