மின்சார இரு சக்கர ஊர்திகளை கையாளுவதில் கவனமும், எச்சரிக்கையும் தேவை என அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியை சேர்ந்த துரைவர்மா, 3 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள வாகன விற்பனை நிலையத்தில், எலக்ட்ரிக் பைக் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த பைக்கிற்கு நேற்றிரவு வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரியில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதில் எலக்ட்ரிக் பைக் மற்றும் அருகே இருந்த பெட்ரோல் பைக்கும் தீப்பற்றி முழுவதும் எரிந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், ஏற்பட்ட புகை வீடு முழுவதும் பரவிய நிலையில், உறங்கி கொண்டிருந்த துரைவர்மா, மகள் மோகன ப்ரீத்தி ஆகியோர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்செய்தியறிந்து வேதனை அடைந்ததாக பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மின்சார இரு சக்கர ஊர்தி தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்நுட்பம் என்பதால், பழகும் வரை, அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அரசும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.