62 வயதிலும் ஒருவரால் தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் ஓட முடிகிறது என்றால் அதற்கு நான் தான் சாட்சி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்களுக்கான உடற்பயிற்சி குறித்த உடல்நலம் பேணுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சி அன்றாடம் தேவையான ஒன்று என்றார். தினந்தோறும் இந்தியாவில் தொற்றால் பாதிக்கப்பட்டு 50 முதல் 60 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில், உலகம் முழுவதும் 110 நாடுகளில் ஒமிக்ரானின் புதிய உருமாறிய வைரஸ் பிஏ 4 , பிஏ 5 என்று வைரஸ் உள்ளது என குறிப்பிட்டிருந்ததாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மட்டும் கடந்த நான்கு மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு உயிரிழப்பு கூட இல்லாத நிலை நீடித்தது வருகிறது என்றார். 25 ஆண்டு காலம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவன் தான் என தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடற்பயிற்சி இல்லை என்றால் தனக்கு இந்த நோயினால் ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என கூறினார்.
25 ஆண்டு காலம் கடந்து ஒரு நாளைக்கு 15 மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறேன். 62 வயதிலும் தினமும் ஒருவரால் 3 கிலோ மீட்டர் ஓட முடிகிறது என்றால் அதற்கு நான்
தான் உதாரணம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்