கள்ளக்குறிச்சி சம்பவத்தில் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கலவரத்தில் தொடர்புடைய 8 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த வன்முறை குறித்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாணவி சாவு மற்றும் வன்முறை தொடர்பாக நேற்று முன்தினம் வரை 308 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், வீடியோ பதிவுகள், புகைப்படம் மற்றும்
போராட்டக்காரர்கள் விட்டுச் சென்ற வாகனங்களின் பதிவு எண்கள் ஆகியவற்றை வைத்து வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று வீடியோ ஆதாரம் மூலம் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (24), கார்த்தி (25), கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த அருண்குமார் (20), மல்ராஜ் (21), ஸ்ரீதர் (20), சின்னசேலம் ஏர்வாய்பட்டினத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (22), கடலூர் மாவட்டம், அன்னவல்லி பகுதியைச் சேர்ந்த பாலமூர்த்தி (22) ஆகியோர் கலவரத்தில் ஆயுதங்கள் கொண்டு ஈடுபட்டதாகவும், பள்ளிக் கட்டடத்தை சேதப்படுத்திய கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த மனீஷ் (26) ஆகிய 8 பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இவர்களையும் சேர்த்து மாணவி சாவு மற்றும் வன்முறைச் சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 316ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-ம.பவித்ரா