கொரோனா மூன்றாம் அலை உருவாகக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில், ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் மற்றும் தடுப்பூசி நிலவரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், ஆக்சிஜன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தங்குதடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும், நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அடுத்தை சில மாதங்களுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி, விநியோகம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி குறித்தும் பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.








