நாமக்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூபதி வீடு உள்பட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மல்லசமுத்திரத்தை சேர்ந்தவர் பூபதி(40). இவர் தற்போது நாமக்கல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் பணியாற்றிய போது புகையிலை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு துணை போனதாகவும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தப்பிச் சென்ற கும்பலிடம் லஞ்சம் பெற்று விடுவித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து எருமப்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். சில மாதங்களுக்கு முன் மீண்டும் நாமக்கல் காவல் நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கும் புகார் சென்றது.
இந்த நிலையில் இன்று காலை நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுபாஷினி தலைமையிலான போலீசார் நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, மல்லசமுத்திரத்தில் உள்ள அவரது தந்தை மற்றும் மாமனார் வீடுகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனை சம்பவம் நாமக்கல் காவல்துறை அதிகாரிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.