வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்த நிலையில் வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 28ஆம் தேதி தந்த தீர்ப்பில் பொன்முடி மற்றும் அவரை சார்ந்தோர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுப்பதாக வேலூர் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் சார்பாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பொன்முடி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது “இந்த வழக்கை ஏன் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன் என்பது குறித்து 17 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளேன். இதுவரை நான் பார்த்ததில், மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதால் தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன். எனவே, இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன் என்று வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.







