31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

அனுதாபத்துக்கு இடமில்லை: அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா

அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை அசாமில் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில் 11.7 சதவீதம் பேர் கருவுருகின்றனர். அசாமில் உள்ள நிறைய மாவட்டங்களில் பெண்களுக்கு 18 வயதிற்கு முன்னதாக திருமணம் செய்கின்றனர். இந்நிலையில்தான் அசாம் அரசு குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த ஜனவரி மாதம் குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்திய பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பால் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக 4074 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டுக்குள் அசாமில் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் ஒழிக்கத் திட்டமிட்டுள்ளதாக அசாம் அரசு கடந்த அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுத்தது.

அசாமில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்திருந்தார். அதேபோல் 14 வயதிற்கும் குறைவான சிறுமிகளை திருமணம் செய்தவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, அசாமில் குழந்தை திருமணத்தை ஒழிக்க அசாம் அரசு  களத்தில் இறங்கியது. அதன்படி, 18 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை திருமணம் செய்த 2 ஆயிரத்து 258 பேரை போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை  கைது செய்தனர். குழந்தை திருமணம் செய்து வைத்த மதபோதகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், குழந்தை திருமணம் தொடர்பாக 4,074 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென பெண்கள் சிலர் காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. பிற்போக்கு நடைமுறையான குழந்தை திருமணங்களைத் தடுக்கும் 5 ஆண்டு நடவடிக்கைகளில் இது ஒரு பகுதி. 2026-ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குழந்தை திருமணத்தில் இருந்து லட்சக்கணக்கான 19 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை காப்பாற்றவும், இந்த தலைமுறையை துன்பத்தில் இருந்து மீட்கவும் குழந்தை திருமணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். அனுதாபம் என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. அசாமில் குழந்தை திருமணங்களை நிறுத்த வேண்டும். கணவர்கள் சிறையில் இருப்பதால் யாருக்கேனும் நிதி நெருக்கடி ஏற்பட்டால் அதை அரசு பரிசீலனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியர்களிடம் கூறியுள்ளேன் என்றார்.

இதுகுறித்து, அசாம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, “ஆயிரக்கணக்கான குடும்பங்களை அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்துகிறது” என்று  குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “குழந்தை திருமணத்திற்கு எதிரான சட்டம் உள்ளது. அது இன்றோ நேற்றோ உருவாக்கப்பட்டது அல்ல. இத்தனை ஆண்டுகளாக அரசு ஏன் தூங்கிக் கொண்டிருந்தது?. இப்போது, ​​இன்று ஏன் திடீரென ஆயிரக்கணக்கானோரை கைது செய்கிறார். மக்கள் சட்டத்தை மீறும் காலத்திலிருந்தே பிடிக்கப்பட வேண்டும். ஆனால், 1.5 அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணமாகி குழந்தைகளாக இருந்தாலும், தற்போது மகிழ்ச்சியான குடும்பத்தை நடத்தி வருகின்றனர்” என்றார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அசாம் அரசின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். கணவர்களைத் தொடர்ந்து கைது செய்துவந்தால் அவர்களுடைய மனைவி, குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள், அவர்களுக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

-ம.பவித்ரா

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading