டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் தனது அணி வீரரை ‘சாவடிச்சுருவேன்’ என்று திட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றாலும் கூட போட்டியின் நடுவே கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக கோபமடைந்து அணியின் சக வீரரை திட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 16-வது ஓவரில் திண்டுக்கல் வீரர்கள் ரன் ஓடும்போது அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதனால் தான் அஸ்வின் மிகவும் கடுப்பாகினார்.
Twitter is not ready for Another Kohli 😂 #TNPL #Ashwin pic.twitter.com/1e9T7syqyt
— rj facts (@rj_rr1) August 1, 2024
டக் -அவுட்டில் அமர்ந்து இருந்த அஸ்வின் வேகமாக எழுந்து சாவடிச்சிருவன் ஒழுங்கா விளையாடு என்பது போல கடும் கோபத்துடன் கத்தினார். இதனை பார்த்த அங்கிருந்த வீரர்கள் பலரும் அதிர்ச்சியாக அஸ்வினை பார்த்தார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அஸ்வினுக்கு இவ்வளவு கோபம் வருமா? என்பது போல கேள்வி எழுப்பி வருகிறார்கள்.







