ஆருத்ரா கோல்டு லோன் மோசடி விவகாரத்தில், பிரபல திரைப்பட நடிகரான ஆர்.கே.சுரேஷூக்கு தொடர்பிருப்பது விசாரணையில் வெளிவந்துள்ளது.
முதலீடு செய்த பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தரப்படும் எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் மோசடி செய்தது ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம். இந்த மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேரை குற்றவாளிகளாக சேர்த்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆருத்ரா மோசடி வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசாரால் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மோசடி செய்யப்பட்ட பணத்தில் இதுவரை ரொக்கமாக 5 கோடியே 69 லட்சம் ரூபாயும், 1 கோடியே 13 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்த 96 கோடி ரூபாய் முடக்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்களின் 97 கோடி ரூபாய் மதிப்புடைய அசையா சொத்துக்களும் கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பிருப்பதாக தெரிய வந்தது. அதேபோல அண்மையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரிஷையும் 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையிலும், ஆருத்ரா மோசடியில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் தொடர்பு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.பாஜக-வில் ஓ.பி.சி பிரிவு மாநில துணைத் தலைவராக இருந்து வரும் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் இருந்து தனக்கு வேண்டப்பட்டவர்களை காப்பாற்ற உதவி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல ஆருத்ரா இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்ட ரூசோ ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதை பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது.
அதனடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. நேரில் விசாரிக்க அதிகாரிகள் சென்றபோது அவர் துபாய் சென்றுள்ளதாக தெரியவந்ததாகவும், அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்றுள்ள ஆர்.கே.சுரேஷை அழைத்து உரிய விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், அவர் தலைமறைவாகிவிட்டாரா என்ற சந்தேகம் இருப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. நடிகர் ஆர்.கே.சுரேஷை விசாரித்த பின்னரே, ஆருத்ரா நிறுவனத்திடம் இருந்து பெற்ற பணத்தை அவர் திரைப்படங்களில் முதலீடு செய்துள்ளாரா..? திரை பிரபலங்கள் இன்னும் யாருக்கெல்லாம் இதில் தொடர்புள்ளது போன்ற முக்கிய தகவல்கள் வெளியாகும் எனவும் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் தகவல் தெரிவித்தனர்.