ஆருத்ரா மோசடி : பாஜக-வின் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் M.R கிருஷ்ண பிரபு ராஜினாமா..!

கடந்த சில வாரங்களாக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும், ராஜினாமா செய்து வரும் நிலையில், தற்போது பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு என்பவர் ராஜினாமா செய்துள்ளார். ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட…

கடந்த சில வாரங்களாக பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும், ராஜினாமா செய்து வரும் நிலையில், தற்போது பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு என்பவர் ராஜினாமா செய்துள்ளார்.

ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருவதாகவும், அதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் பாஜகவில் இருந்து விலகிய எம் ஆர் கிருஷ்ணா பிரபு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி நிர்வாகிகளிடம் பணம் கேட்டு அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தொல்லை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஆருத்ரா மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக உள்ளதாக குற்றம்சாட்டி உள்ள அவர், பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிராக சில விஷயங்களை வற்புறுத்தி செய்ய சொல்வதாக குற்றம்சாட்டியுள்ள அவர், புகார்கள் மீது அண்ணாமலை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என சாடினார். மேலும், உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சி பாஜகவில் இருந்து விலகியுள்ளதாக கிருஷ்ணபிரபு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிப்பும் மரியாதைக்குரிய மாநில தலைவர் அண்ணாமலைக்கு, நான் பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளராக இருந்து வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கக் கூட தகுதி இல்லாத சிலரை நீங்களும் மரியாதைக்குரிய கேசவ விநாயகம் அவர்களும் பொறுப்பில் அமர்த்தி அழகு பார்ப்பதாலும், கட்சியில் நீங்கள் சொல்வதைப் போல கட்சி உறுப்பினர்களிடமும் நிர்வாகிகளிடமும் அவசியமில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதால் எந்த காலத்திலும் கட்சி வளராது.

அதற்கும் மேல் நேர்மாறாக இங்கே அவர்களது சுய லாபத்திற்காகவும் மதம் சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொண்டு தமிழ்நாட்டுக்குள் பலவிதமான சச்சரவுகளையும், மேலும் எங்களிடமிருந்து தொண்டர்கள் நிர்வாகிகள் இருந்தும் பணம் வசூலிக்க சொல்லியும், மேலும் பணத்தைப் பெற்றுக் கொண்டும் பல விதமான அரசியல்களை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

எங்களை நீங்கள் ஜனநாயகத்துக்கு எதிராக வற்புறுத்தி சில விஷயங்களையும் கோரிக்கைகளையும் செய்ய சொல்வதாலும், என்னைப் போன்ற நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சிக்கும் உங்களுக்கும் உண்மையாக வேலை பார்த்த நிர்மல் குமாரை போன்ற நிர்வாகிகளையும் பல இன்னல்கள் ஆளாகிய எந்த ஒரு கட்சி வேலையில் செயல்பட விடாமல் செய்தனர்.

மேலும் ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்து வருகிறது. இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு எனது மனம் கொள்ளவில்லை. இந்தக் கட்சி என்னையும் என் குடும்பத்தாரையும் பழுது பார்த்து விட்டனர். மேலும் இந்த பொருளாதார பிரிவின் பிரச்சனைகளையும் நேரடியாக உங்களுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் பிரச்சினைகளை சொல்லியும், இதுவரை நீங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் நான் எனது பொருளாதாரப் பிரிவின் மாநில செயலாளரும் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன்.

எதற்கு முழு காரணமாக இருக்கும் பொருளாதார பிரிவின் மாநில தலைவர் எம்.எஸ்.ஷா மதுரை மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் நரசிங்க பெருமாள் இவர்களை எல்லாரையும் வழிநடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஆகிய நீங்கள்தான், ‘நீங்கள் சரி பட செயல்படவில்லை’ என்று குறிப்பிடுகிறேன். பணம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த கட்சியில் பொறுப்பு வழங்கப்படுகிறது என ஊர்ஜிதமான உண்மை இதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளன இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன்” என்று கிருஷ்ணபிரபு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பக்கம் ஆருத்ரா மோசடி வழக்கு, ரபேல் வாட்ச், பாலியல் குற்றச்சாட்டு, முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகல் என தொடர்ந்து தமிழக பாஜகவில் விரும்ப தகாத சம்பவங்கள் அரங்கேறுவதால், இவை அனைத்தும் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கு தலைவலியாக அமைந்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.