கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு குடும்பம் குடும்பமாக செல்லும் மதுரை மக்கள் – ஒரே நாளில் 5,000-க்கும் மேற்பட்டோர் வருகை!

மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றனர்.  மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து…

மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றனர். 

மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.216 கோடி மதிப்பீட்டில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 334 சதுர அடி கட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை நேற்று முன்தினம் தமிழ்நாடு  முதலமைச்சர் மு.கஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

மதுரையில் பொழுதுபோக்கு இடங்கள் என ஏராளம் இருந்த போதிலும், விடுமுறை தினமான நேற்று அதிக கூட்டம் திரண்டது கலைஞர் நூலகத்திற்குத் தான். சுற்றுலா செல்வது போல் குடும்பம், குடும்பமாக நூலகத்திற்கு பொதுமக்கள் சென்றனர். 6 தளங்களை கொண்ட நூலகத்தை பொது மக்கள், மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் வந்து கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டு வருகின்றனர். முன்னதாக நூலகத்தை பார்வையிட வருகை தரும் வாசகர்களை கவரும் வகையில் இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர்.

தரைத்தளத்தில் உள்ள கலைக்கூடத்தில் மதுரையில் பண்டைய கால வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் திருமலை நாயக்கர் மஹால், விளக்குத் தூண், மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு நுழைவு வாயில், வைகை ஆற்றின் தரைப்பாலம், யானைமலை, அமெரிக்கன் கல்லூரி, காந்தி மியூசியம், 1930 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கழுகுப் பார்வை படம், தெப்பக்குளம், யானைக்கல், மதுரை தினசரி சந்தை, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான தப்பாட்டம், பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் ஒயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து, புலியாட்டம், உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களின் தொகுப்பு கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டைய கால கல்வெட்டுக்கள் தமிழ் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி, பொருநை அகழ்வாராய்ச்சிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் தனிப்பரிவு செயல்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நூல்களை பார்வையிட வசதியாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளது. முதல் தளத்தில் குழந்தைகள் பிரிவு உள்ளது.

குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு பொருட்கள், புத்தகங்கள் ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப் பட்டுள்ளது. புத்தகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட பின்னர் பொது மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவர். நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு இரண்டாம் தளத்தில் செயல்படுகிறது. தினசரி, வார, மாத, நாளிதழ்கள் கட்சிக்கு வைக்கப்பட்டுளது. முதல் தளத்தில் கலைஞர் பிரிவு செயல்படுகிறது. இரண்டாவது தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவும் செயல்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக் கான நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் உருவச் சிலை முன்பாகவும், நூலகத்தின் தரை தளத்தில் உள்ள கலைக் கூடத்தின் பின்னணியிலும் திரளானோா் தற்படம் எடுத்துக் கொண்டனா். ஏராளமான சிறாா்கள், அவா்களுக்கான பிரிவில் உள்ள புத்தகங்கள், அறிவியல் படைப்புகளை ஆா்வத்துடன் வாசித்து மகிழ்ந்தனா்.

இதேபோல, பாா்வையாளா்கள் திரையில் தோன்றி கருணாநிதியுடன் உரையாடுவதைப் போன்ற தோற்றம் அளிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டு மகிழ்ந்து, அந்த திரைக் காட்சியைப் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

இதுகுறித்து நூலகத்தை பார்வையிட வந்த பார்வையாளர் ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை அண்ணா நூலகத்திற்கு அடுத்தபடியாக மதுரையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மாநகராட்சி வளாகம் மற்றும் காந்தி மியூசியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளியில் அமர்ந்து படித்து வந்தனர். தற்போது கலைஞர் நூலகத்தில் அமைதியான சூழ்நிலையையும், தோட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் கலைஞர் நூலகத்தை பயன்படுத்தி ஏராளமானோர் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு பதவிகளில் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் திறந்து இருக்கும். பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, ரம்ஜான், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை தினங்களில் நூலகம் செயல் படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளான நேற்று ஏறத்தாழ 5000க்கும் மேற்பட்டோர் நூலகத்தை பார்வையிட்டு சென்றனர் என நூலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.