வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கான்கிரீட் கல் வைத்தவருக்கு மனநல சிகிச்சை அளிக்க ஏற்பாடு
அதிகாலை 03.28 மணிக்கு ஆம்பூர் ரயில் நிலையத்திற்கும் பச்சக்குப்பம் ரயில் நிலையத்திற்கும் இடையே வண்டி எண். 16022 காவேரி விரைவு ரயில் சென்றுக்கொண்டிருந்த போது, வண்டியின் என்ஜினின் மீது கல் மோதியது. இது குறித்து ஜோலார்பேட்டை இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டதில் சம்பவ இடத்தின் அருகில் தண்டவாளத்தின் வெளிப்புறத்தில் சுமார் 7 கி எடையுள்ள உருண்டை வடிவ சிமெண்ட் கான்கீரிட் கல் ஒன்று இருந்தது. மேலும் அந்த இடத்தில் பழைய தேங்காய் நார் கயிறு மற்றும் சாமிக்கு கட்டப்படும் கரை துண்டும் இருந்தது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் தண்டவாளத்திற்கு அருகே வீரக்கோயில் ஒன்று உள்ளது. இருந்த கான்கீரிட் கல்லானது கோயிலின் பின்புற சுற்றுச்சுவர் அருகே எடுத்ததற்கான அடையாளம் இருந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்திருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் உடுத்தியிருந்த உடை மற்றும் அவரது நடவடிக்கைகளை பார்க்கும் போது அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரியவந்தது. மேலும் அந்த நபர் சம்பவ இடத்திலிருந்த கயிறு மற்றும் துணிகளை தனது கழுத்திலும் கட்டியிருந்தார்.
சந்தேகத்திற்குரிய அந்த நபரை விசாரித்ததில், அவரது பெயர் மங்கள் பிரசாத், மேற்கு வங்காளம் மாநிலத்ததை சேர்ந்த நபர் என தெரியவந்தது. மேலும் அந்த நபர் சம்பவ இடத்தில் சுற்றி திரிந்ததை பார்த்ததாக சாட்சிகள் கூறியதன் பேரில் அவர்தான் சம்பவத்தை செய்தார் என தெரியவந்திருக்கிறது.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே சொத்துக்களுக்கும், ரயில் பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மங்கள் பிரசாத் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதால், அவர் இது போன்ற செயலில் மீண்டும் ஈடுபடாமல் இருக்கவும், அவருக்கு ஏற்பட்டுள்ள மன நோய்க்கு இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.