அதிமுக ஆட்சியில் போதை பொருள் கைப்பற்றப்பட்ட புள்ளி விவரத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட தயாரா? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் மண்டலம் -11, 155 வது வார்டு ராமாபுரத்தில் 20 கோடி மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் பருவ மழையின் பொது கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு போல இந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு துறைகள் இணைந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.
குறிப்பாக வளசரவாக்கம் பகுதியில் மழை பெய்யும் போது, மழை நீர் போவதற்கு இடம் இல்லாமல் வீடுகளுக்குள் மழை நீர் சூழும் நிலையில் உள்ளது. வளசரவாக்கத்தில் இருந்து ராயபுரம் வழியாக அடையாள அட்டை இணைக்கும் கால்வாய் ஒன்று இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பாக கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட மூன்று துறைகள் இணைந்து மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடத்தி வருவதாகவும், சென்னையில் உள்ள நீர் நிலைகள், 16 கால்வாய்களை தூர்வாரும் பணி 200 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வருகிறது என்றார். மேலும், 1050 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் சென்னையில் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் நிறைவு பெற்றால் சென்னையில் பருவமழைக்கு முன்பே மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும் என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு பதில் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஜெயகுமாரின் பேச்சு என்பது அநாகரிக தனம் போல இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள். அவரின் பேச்சுகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. கடந்த 9 ஆண்டில் கஞ்சா குட்கா உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தியவர்கள் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் என்று அவருக்கு தைரியம் இருந்தால் தெரிவிக்கட்டும் என்றார். திமுக ஆட்சி அமைந்து கடந்த 15 மாதத்தில் அதைவிட நாங்கள் அதிகமான வழக்கு பதிவு செய்து, கஞ்சா, போதை பொருட்களை பறிமுதல் செய்திருக்கிறோம்.
இதுகுறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், தான் வெளியிட்டதில் தவறு இருந்தால் அவரே அதிமுக ஆட்சியில் கைப்பற்றப்பட்ட விவரம் குறித்து தகவல் தெரிவிக்கட்டும். தமிழ்நாட்டில் கஞ்சா உற்பத்தி 100% தடைசெய்யப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவிக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டிற்கு வரும் கஞ்சா குறித்து ஆய்வு செய்த போது, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா,போன்ற மாநிலங்களில் இருந்து வருவது உறுது செய்யப்பட்டது. அதிலும் ஆந்திராவில் இருந்தே அதிகம் கடத்தி வருவதை உறுதி செய்து, ஆந்திராவிற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதனால் 6,500 ஏக்கரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுவதை கண்டறிந்து ஆந்திர அரசுக்கு தெரிவித்தோம். உடனடியாக அதனை ஆந்திர அரசு அழித்தது. இதன் மொத்த மதிப்பு 4
ஆயிரம் கோடி எனவும், இதுபோன்ற செயல் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதா? என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
– இரா.நம்பிராஜன்








