தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி திருவாரூரில் பேட்டி.
திராவிட கழகம் சார்பில் இன்று மாலை திருவாரூரில் சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடு நடைபெறுவதாக இருந்தது. இதில் திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உட்பட திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு பேசுவதற்காக திருவாரூர் வந்தடைந்தனர். ஆனால் திருவாரூரில் மாலை நேரத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது,திருவாரூரில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள சனாதன எதிர்ப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க திறந்தவெளி மாநாடானது அடுத்த மாதம் செப்டம்பர் 4ந்தேதி இதே திருவாரூரில் நடைபெறுகிறது. இதில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்த அனைத்து தலைவர்களும் அன்றைய தினம் கலந்து கொண்டு பேச உள்ளனர். அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் குறித்து பேசிய அவர்,அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அரசின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனக் கூறினார்.







