அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர்…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு உட்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், கோவிந்தம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள வீடு உட்பட தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சென்னையில் 14 இடங்களிலும், ஈரோடு, நாமக்கல், வேலூர், கரூர், திருப்பூர், கோவை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் உள்ளிட்ட 69 இடங்களிலும், அதிகாலை முதலே சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து, கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணியின் வீட்டின் முன்பு, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://twitter.com/news7tamil/status/1470968409173086209

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இதுவரை முன்னாள் அமைச்சர்கள் 5 பேரிடம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்துள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.பாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.