மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவில் 12 திருவிளையாடல் நிகழ்வுகளும், சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வும் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழா வருகிற 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் நான்கு ஆவணி மூல வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும் அம்மனும் வீதியுலா வருவர். அதனை தொடர்ந்து ஆகஸ்டு 29-ம் தேதி முதல் செப்டம்பர் 9-ஆம் தேதி வரை 12 நாட்கள் 12 திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெறும்.
ஆகஸ்டு 29-ம் தேதி மூல உற்சவ முதல் திருநாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல், ஆகஸ்டு 30-ம் தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், ஆகஸ்டு 31-ம் தேதி மாணிக்கம் விற்றல், செப்டம்பர் 1-ம் தேதி தருமிக்கு பொற்கிழி அருளியது, செப்டம்பர் 2-ம் தேதி உலவாக்கோட்டை அருளியது, செப்டம்பர் 3-ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டியது மற்றும் திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல், செப்டம்பர் 4-ம் தேதி வளையல் விற்றல், செப்டம்பர் 5-ம் தேதி நரியை பரியாக்கியது, செப்டம்பர் 6-ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை, செப்டம்பர் 7-ம் தேதி விறகு விற்ற படலம் ஆகிய திருவிளையாடல் நிகழ்வுகள் நடைபெற உள்ளன..
மதுரையில் சித்திரை முதல் ஆவணி வரை 4 மாதங்கள் மீனாட்சி அம்மன் ஆட்சியும், ஆவணி முதல் சித்திரை வரை 8 மாதங்கள் சுந்தரேசுவரர் ஆட்சியும் நடைபெறும் வழக்கத்தின் அடிப்படையில் செப்டம்பர் 4 ஆம் தேதியன்று இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் சுந்தரேசுவரர் பட்டாபிஷேக நிகழ்வு நடைபெறும்.
செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்வை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலையில் கோவிலில் இருந்து புறப்பட்டு பிட்டுத்தோப்புக்கு சென்று உற்சவம் முடிந்து இரவு 9:30 மணிக்கு கோவிலுக்கு வந்தடைவர். அன்றைய தினம் பக்தர்கள் அனைவரும் வடக்கு கோபுர வாசல் வழியாக சென்று ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 8 மணி வரையும் கண்டு களிக்கலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆன்மீகம் தொடர்பான தகவல்களையும், நிகழ்ச்சிகளையும் நமது நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனலை பின்தொடர்ந்து பார்த்து மகிழுங்கள்..
– இரா.நம்பிராஜன்








