பெட்ரோல், டீசல் விலை குறைப்பை வலியுறுத்தி பாஜக சார்பில் நடைபெற்ற கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் பேரணியின் தொடக்க இடமான எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் நிரம்பி வழிந்ததாகவும், அருகிலிருந்த தெருக்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலை அலையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக அரசிடம் புதிதாக தாங்கள் எதையும் கேட்கவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதியில் கூறி இருந்ததையே நிறைவேற்றக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது திமுக கோட்டை விட்டதை சொன்னவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோட்டையை விட்டு மயிலாடுதுறைக்கு கிளம்பிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு இரண்டு முறை குறைத்தும், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை பாக்கி என்றி முழுமையாக கொடுத்த பிறக்கும் தமிழக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபற்றி பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதும் தமிழக அரசு கேளா காதுடன் செயலின்றி இருப்பதாக விமர்சித்துள்ள அண்ணாமலை, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது அக்கறை இன்றி இருப்பது மக்களை அவமதிக்கும் செயல் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற போராட்டம் தமிழக முதலமைச்சருக்கு அறிவுருத்துவதற்காக நடத்தப்பட்டது என்றும், இனியும் விலையை குறைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
பாஜகவின் மக்கள் போராட்டத்திற்கு மகத்தான ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களுக்கான இந்த பயணம் தொய்வின்றி தொடரும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.